Saturday, January 29, 2011

கர்மத்தின் இலக்கணம் என்ன?/யஜ்ஞம் என்றால் என்ன ?


கர்மம் வெவ்வேறு வகைப்படும் ;
அதனால் அதன் இலக்கணமும் வேறுபடும்.

நாம் இச்சித்துச்செய்யும் செயல்களும் கர்மம்தான்
கண்கொட்டல் போன்று தானாக இயங்கும் செயல்களும் கர்மம்தான்.ஆகையால் பொதுவாக அசைவு அல்லது சலனம்தான்
கர்மம் என்று இலக்கணம் கூறலாம்
உடல் முழுவதும் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது-
மூச்சு விடுதல்,சிந்திப்பது,சாப்பிடுவது எல்லாமே செயல்தான்
உயிர் வாழும் பிராணிகள் செயலில் ஈடுபடாத நேரமே இல்லை
தூக்கத்தில் மூச்சு விடும்போது உறுப்புகள் வேலை செய்கின்றன.

கர்மத்தைச் செய்யத் தூண்டுவது எது?
அசைவுதான் செயல் என்றால்,இவ்வுடல் உயிர் வாழும்வரை
நம்மால் செய்லின்றி இருக்க முடியாது
இச்சித்துச் செய்யபடுவது செயல் என்றால் ஏதோ ஒன்றால் ஏவப்பட்டது போன்று நம் வசமின்றி ஏதாவது ஒரு செயலை நாம்
செய்துக்கொண்டே இருக்கிறோம்
இந்த ‘ஏதோ ஒன்றைபகவான் ‘பிரக்ருதி  என்று கூறுகிறார்

எல்லாப் படைப்புகளும், எல்லாக் கார்யங்களும் எந்தமூலப் பொருளிலிருந்து பிறக்கின்றனவோ அந்த உபாதாநகாரணம்-
பிரக்ருதி எனப்படும்
இறைவனின் சக்தியிலிருந்து உபாதாந காரணமான பிரக்ருதியிலிருந்துதான் நமது மனதும் பிறந்திருக்கிறது

பிரக்ருதி என்பது ஸத்வம்,ரஜஸ்,தமஸ் எனற 3 குணங்களால்
ஆனது இந்த 3 குணங்கள் நம் மனத்திலும் காணப்படுகின்றன.


அந்த:கரணம்-எனப்படும் மனதானது பிரக்ருதியின் மூன்று குணங்களையும் கொண்டது

1.தமஸிலிருந்து- செயலால் என்னகிடைக்கும்
2 ரஜஸிலிருந்து- பெருமைக்காக செய்ய விரும்பும்பொழுது
3.ஸத்வத்திலிருந்து - தேவைக்கு செய்யும்பொழுது

இந்த மூன்று வித இச்சைகளினால்தான் அனைத்து உயிரினங்களும் கர்மத்தில் ஈடுபடுகின்றன

யஜ்ஞம் என்றால் என்ன ?



யஜ்ஞார்தா த் கர்மணோSந்ய்த்ர லோகோSயம் கர்மப ந் ந: 

ர்தம் கர்ம கெளந்தேய முக்தஸங்: ஸமாசர 
                                    பகவத் கீதா 3-9

யஜ்ஞத்தின் பொருட்டான கர்மத்தினால் மட்டுமே இந்த மனித உலகம் கட்டுறுகிறது ; வேறு எந்த கர்மத்தினாலும் அல்ல.
அர்ஜுனா அதன் (யஜ்ஞத்தின்) பொருட்டு பற்றை
விட்டவனாய் கர்மத்தை நன்கு செய்வாயாக.

யஜ்ஞம்-(வைதிக சடங்கு) என்ற சொல் நம் சாஸ்த்ரத்தில் மிகவும் முக்கியமானது
யஜ்ஞத்தில்- கொடுப்பவர்,கொடுக்கப்படுவது , வாங்குபவர் என்ற
மூன்று கூறுகள் உள்ளன. இதை தவிர அர்ப்பணிக்கபடும் இடம்
என்ற நான்காவது கூறும் உள்ளது

விரிவாக பார்த்தால் கொடுத்தல் என்பது - யஜ்ஞத்தில் ஈச்வர அர்ப்பணம் ஆகும் ஸ்வாஹா நம சொல்லி அர்ப்பணிக்கிறோம்

ஆகையால் நாம் இச்சித்துச்செய்யும் செயல்களை ஈச்வரனுக்கு அர்ப்பணிக்கும் போது செயல்கள் யஜ்ஞ ம் ஆகிறது.
அப்படிப் பட்ட செயல்களால் இந்த மனித உலகம் கட்டுறுகிற்து இதன் மூலம் பகவான் கூறுவது யஜ்ஞத்தின் பொருட்டு பற்றை
விட்டவனாய் கர்மத்தை நன்கு செய்வாயாக




Thursday, January 13, 2011

கர்மம்-செயலை பற்றிய பொதுவான ஸந்தேஹம்

நான் என்ன செய்ய வேண்டும்? என்பது பொதுவான ஸந்தேஹம்
அர்ஜுனனைப் போல், குழப்பத்திலும் ஸந்தேஹத்திலும் இருந்து பாடம் கற்க முனைந்தேன் .
நன்றி - ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதிக்கு.
அவரது வீடுதோறும் கீதோபதேசம் என்ற நூலுக்கு.
கீதையின் வழிகாட்டலும்- என் புரிதலும் இங்கே.

 கர்மத்தைவிட ஞானம் உயர்ந்தது என்றால்,
 என்னை ஏன் கோரமான கர்மத்தில் ஈடுபடுத்துகிறாய்?
 முரண்பாடுள்ளது போன்ற சொற்களால் என் புத்தியை நீ   
 குழப்புவது போன்றுள்ளது.
 எதனால் நான் நலனைப் பெறுவேனோ (இரண்டில்) அந்த ஒன்றை 
 உறுதி செய்து கூறு  
 என்று பகவானிடத்தில் அர்ஜுனன் சரணடைந்தான்.

கர்மத்தைப் பற்றி ஸ்ரீ பகவானின் விளக்கம்

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
சரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித் யே கர் மண: (பகவத்கீதா 3-8)

விதிக்கபப்ட்ட கடமைகளை நீ செய்வாயாக;
ஏனெனில், செய்யாமையைவிட செய்தல் மேலானது
அதுவுமல்லாது, உன்னுடைய சரீர பராமரிப்பு கூட,
செயலின்மையால் நடக்காது.

வேதம்-, விஹித, நிஷித்த, காமய, ப்ராயச்சித்த என்று
நான்கு வித கர்மங்களைக் கூறுகின்றது.
விஹித கர்மம் என்பது நியத கர்மம் எனப்படும்.
வேதம்- வர்ணத்திற்கும்,ஆச்ரமத்திற்கும் தகுந்தவாறு
அன்றாடம் செய்ய வேண்டிய நித்ய கர்மங்களையும்
குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் செய்ய வேண்டிய நைமித்திக கர்மங்களையும் கூறுகிறது- இவை இரண்டும்
‘செய்யப்பட வேண்டியவை என்று விதிக்கப்படவை:;
சில கர்மங்களைச் செய்யக்கூடாது என்று வேதம் தடை செய்கிறது
ஹிம்ஸை செய்யக்கூடாது என்று வேதம் கூறுகிறது
இவை நிஷித்த கர்மங்களாகும் .
குறிப்பிட்ட பலன்களைப் பெறுவதற்காகச் செய்யும் கர்மங்கள் காம்ய கர்மங்கள் எனவும்
குறிப்பிட்ட பாப கார்யங்களுக்கு ( நாம் செய்யாமல் விட்டதாலோ,தவறான் வழியில் செய்தற்காகவோ) மன்னிப்பு கோரி
செய்யப்படும் கர்மங்கள்- ப்ராயச்சித்தம் எனப்படும்.
நியத கர்மங்களை யோக புத்தியுடன் செய்யும்போது அந்தக்கரண-சுத்தி பலனாகும். மற்றும் மனவளர்ச்சி, மனப் பக்குவம் ஏற்படுகிறது.
ஜீவனுக்கு முதலில் கொடுக்கப்பட்டது உயிர்சக்தி,பின் தேச காலத்தோடு கூடிய வாழ்க்கை
ஒவ்வோர் உயிருள்ள ஜீவனும் தான் எப்படியாவது பிழைத்திருக்கவேண்டும் என்ற உள்ளுணர்வு கொண்டுள்ளது
உயிர் பிழைத்திருப்பதற்கு மட்டுமே நமக்கு இந்தப் பிறவி கொடுக்கப் படவில்லை. ஸாதிக்க வேண்டிய புருஷார்த்தங்களாக - அறம்,பொருள், இன்பம், வீடு (மோக்ஷம்) என்ற நான்கையும் வேதம் காட்டுகிறது.

கர்மம்-செயல் அதன் பலன் அல்லது விளைவு தவிர்க்க முடியாது

பந்தம் என்கிற முடிச்சு மூன்று விஷயங்கள் கொண்டது
  1. நம்மை பற்றிய அறியாமை இதனால் நம்மை கர்த்தாவாக கருதுவது  
  2. கர்த்தா என்பதால் விளையும் ஆசையும் காமமும்
  3. ஆசையால் செய்வது கர்மம் அல்லது செயல்.
செயலால் ஏற்படுவது பந்தம்.

பற்றிய பந்தத்திலிருந்து விடுதலை அடைவது தான் மோஷம்


கர்மத்தைத் துறப்பதால் மோக்ஷம் அடையமுடியாது; இது உண்மை
கர்மத்தில் ஈடுபடுவதாலும் மோக்ஷத்தை அடையமுடியாது இதுவும் உண்மை.கர்மம் நம்மை பந்தத்தில் ஆழ்த்தக் கூடும் இதுவும் உண்மை
கர்மத்தை-செயலை யோக புத்தியுடன், கடமை உணர்வுடன் ஆற்றும் பொழுது மனம் பக்குவம் அடைகிறது.


செய்யாமையைவிட செய்தல் மேலானது.
கடமைகளைச் செய்தல் பந்தப்படுத்த வேண்டும் என்பது நியதி அல்ல. மாறாக, செய்யாமலிருந்தால் ஒன்றும் ஸாதிக்க முடியாது.
உடல் நலம் கெடும். அதைவிட மன நலம் கெடும். ஆகையால் செயலில் ஈடுபடுவது சிறந்ததாகும். செயலில் ஈடுபட அஞ்சவேண்டாம். செயலை யோக புத்தியுடன் செய் என்பதே ஸ்ரீ பகவானின் விளக்கம்


சரீர யாத்ரா“ நமது சரீரம் ஒவ்வொரு நிலையாக பயணம் செய்து
கொண்டு வருகிறது. இந்தப்பயணமானது செயல்களில் ஈடுபடாவிட்டால் நடக்காது.
யோக புத்தியுடன் செய்யபடும் செயல் மறைமுக ஸாதனமாகி மனம் சுத்தம் அடைந்து விடுதலைக்கு வழிவகுக்கிறது.
இப்படி யோக புத்தியுடன் செய்யப்படும் கர்மமே யஜ்ஞம் எனப்படுகிறது.

அடுத்து யஜ்ஞம் என்ற செயல் அது காட்டும் வழி என்ன என்பதை அறிய முயற்சிக்கிறேன் 

Monday, January 3, 2011

பஞ்ச மஹா யஜ்ஞங்கள்

தேவ யஜ்ஞம்

நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு நற்பேறுகளுக்காக நன்றி கூறும் வகையில் தினந்தோறும் நாம் இறைவனுக்குப் பூஜை
செய்கிறோம் சமைத்த உணவை நிவேதம் செய்கிறோம் இது
தேவ யஜ்ஞ மாகும் 
கோவிலுக்குச் சென்று தொழுவது தேவயஜ்ஞமாகும்

ப்ரஹ்ம யஜ்ஞம்

வேதத்தைக் கற்றும் ஓதியும் கற்பித்தும் அது நசியாமல் பாதுகாப்பது ப்ரஹ்ம யஜ்ஞமாகும்.
நம் சாஸ்த்ரங்கள், புராண இதிஹாஸங்கள் இவற்றை சிரத்தையுடன் படிப்பதும் அவற்றை அடுத்த தலை முறையினர்
கற்பதற்கான உதவிகள் செய்வதும் ப்ரஹ்ம யஜ்ஞமே.

பித்ரு யஜ்ஞம்
நாம் பிறக்கக் காரணமாயிருந்து நமக்கு சரீரத்தைக் கொடுத்து
அதை போஷித்து அறிவு புகட்டிய பெற்றோர்களை நன்கு பேணுதல் பித்ரு யஜ்ஞமாகும். அவர்கள இறந்தபின் அவர்களின்
நற்கதிக்காகச் செய்யப்படும் தர்ப்பணங்கள், ச்ராத்தம் முதலியவையும் பித்ரு யஜ்ஞமாகும் இவற்றின் மூலம் நாம் முந்தைய மூன்று தலைமுறைகளுக்கு நன்றி செலுத்துகிறோம்.
மநுஷ்ய யஜ்ஞம்
நாள்தோறும் நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வசிக்கும் வீடு மற்றைய அடிப்படை வசதிகள் நமக்குக் கிடைப்பதற்கு பல மனிதர்கள் உழைக்க வேண்டி இருக்கிறது அவர்கள் அனைவருக்கும் தனித்தனியே நன்றி கூறுவது எனபது முடியாத காரியம். ஆகையால் ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் முன் அதிதிக்கு உணவிட்டு உண்ணுதல் விசேஷமாகும். முடிந்தவரை பசியுடன் இருப்பவர்களுக்கு உணவிடுதல் மற்றவிதங்களில் நம்மைச் சுற்றி உள்ளோர்களுக்கு உதவுதல் முதலியவை மநுஷ்ய யஜ்ஞ மாகும்  இது ந்ரு யஜ்ஞம் என்றும் கூறப்படும்

பூத யஜ்ஞம்
பல்வேறு மிருகங்களும் தாவரங்களும் நேரிடையாகவும் இயற்கை சூழ்நிலையை பராமரிப்பதன்மூலமும் நமக்கு உதவுகின்றன. சமைத்த உணவை இறைவனுக்குப் படைத்தபின்
காக்கை முதலியவற்றுக்குப் போட்டுவிட்டு உண்பது பூத யஜ்ஞமாகும். அரிசி மாவால் கோலமிட்டு எறும்புகளுக்கு உணவிடுதல், பசு நாய் முதலியவற்றுக்கு உணவிடுதல்,
செடிகொடிகள்,பயிர்கள் வாடாமல் நீரூற்றுவதும் பூத யஜ்ஞமே